Contact Information

JKrish Pvt Ltd, AIC Raise, Rathinam Techzone, Eachanari, Coimbatore. Tamilnadu - 641 021.

We Are Available 24/ 7. Call Now.

‘மோகன்லால் முதல் பிரபலங்கள் வரை’ – கெத்துகாட்டும் கேரள லேடி பவுன்சர் அனு குஞ்சுமோன்!

மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் நிகழ்ச்சி ஒன்றில் பெருந்திரளுக்கு மத்தியில் நடக்க, அவருக்கு பாதையை அமைத்து கொண்டே சென்றார் கருப்புடை அணிந்த பெண் பவுன்சரின் வீடியோ இணையத்தில் வைரலாக, சிங்கப் பெண்ணே என சிலாகிக்கத் தொடங்கிவிட்டனர்.

யார் அந்த லேடி பவுன்சர்? சேச்சியின் பெயர் அனு குஞ்சுமோன், ஆண்களே ஆதிக்கம் செலுத்தும் பவுன்சர் பணியில் மாஸ் காட்டிவருகிறார்.

“பெண் பவுன்சர்களைப் பற்றிய ஒரு கட்டுரைக்கு PTI-யின் நிருபர் என்னை இன்டர்வியூ செய்தார். அப்போது, அவர்களுக்கு சில வீடியோக்களையும் பகிர்ந்தேன். அவற்றில் ஒன்று தான் வைரலானது. அந்த வீடியோ வைரலாகியதில், நான் மோகன்லாலின் லேடி பாடிகார்ட் என்று தவறாக எண்ணி பதிவிட்டு வருகின்றனர். நிகழ்ச்சி ஒன்றில் பவுன்சர் பணி செய்த போது எடுத்த வீடியோ மட்டுமே அது,” என்று கூறினார் அனு.

யார் இந்த அனு குஞ்சுமோன்?

எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிராமட்டத்தில் பிறந்த அனு குஞ்சுமோன், பல்வேறு கஷ்டங்களுக்கும், போராட்டங்களுக்கும் மத்தியில் சிங்கிள் பேரண்ட் ஆன அவரது தாயால் வளர்க்கப்பட்டார். வளரும் போது கிடைத்த அனுபவங்களின் வழி வாழ்க்கையில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதில் உள்ள சிரமங்களை உணர்ந்திருந்தார். அதனால், சிறு வயதிலிருந்தே அவருக்கு கிடைத்த சிறுவாய்ப்புகளை தனக்குதானே சவாலாக எடுத்து கொண்டு செய்து முடித்துள்ளார்.

அப்படி தான், கேரளாவில் போட்டோகிராபி துறை பெண்களுக்கு ஏற்ற ஒன்றாக கருதப்பட்டபோது, அத்துறையில் நுழைந்தார். திருமண நிகழ்வுகளில் புகைப்படம் எடுப்பதுடன், திரைப்பட படப்பிடிப்பிலும், விளம்பரப் படப்படிப்பிலும் பணியாற்றி வந்துள்ளார். அங்கிருந்து, எதிர்பாரா திருப்பமாக பவுன்சராக மாறியது மிகவும் தற்செயலாக நடந்தது.

“ப்ரமோஷனல் ஈவெண்ட் ஒன்றிற்கு போட்டோ எடுக்க சென்றபோது, அங்கிருந்த பவுன்சருடன் சிறு பிரச்னை ஏற்பட்டது. ஆனா, சீக்கிரமே அவர்களுடன் பேசி பழகியதில், பவுன்சர் டீமுடன் ப்ரெண்ட்ஷிப் ஏற்பட்டது. அவர்களின் பணியால் ஈர்க்கப்பட்டேன். ஆல்ரெடி. என் உடல் ஃபிட் ஆக இருந்ததால், நாட்டில் சில பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து பணிபுரிந்து கொண்டிருந்த பவுன்சர் துறையில் பணியை தொடர முடிவெடுத்தேன்,” என்று பகிர்ந்தார் அனு.

அன்றிலிருந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் கொச்சியில் உள்ள பல்வேறு பப்களிலிலும், தனியார் நிகழ்ச்சிகளிலும் பவுன்சராக பணியாற்றியுள்ளார்.

ஒரு பெண் பவுன்சரை வெற்றி அடைய செய்வது எது?

“உடல் தகுதி என்பது வெறும் ஆரம்பம் மட்டுமே. உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதுடன், தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்வதும் நல்லது. ஆனால், அதற்கு சமமாக மன ரீதியாக விழிப்புடனும் வலிமையுடனும் இருக்கவேண்டும். கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறனும் முக்கியம்.”

அதுபோன்று, பலமுறை எனது மனவலிமை சோதிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை ஒரு பப்பில் பவுன்சர் பணி செய்யும் போது, சிறு சலசலப்பு ஏற்பட்டது. நான் சூழ்நிலையை அமைதியாகக் கையாள முயற்சித்தேன், ஆனால் அது பலனளிக்கவில்லை. அது ஒரு வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது. ஆனால் நான் அதை தொழில் ரீதியாகக் கையாண்டேன் என்று நினைக்கிறேன். ஏனெனில், எந்தவொரு முறையான புகார்களுமின்றி அப்பிரச்சினை முடிவுக்கு வந்தது, என்று கூறி நினைவு கூர்ந்தார்.

குஞ்சுமோனின் குறிப்பிடத்தக்க பயணத்தின் மையத்தில் அவரது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் உள்ளனர்.

“என்னை எங்க அம்மா தனிமனிஷியாக வளர்த்தார். ஆனால், என் அம்மா போராடுவதை பார்த்துள்ளேன். வெவ்வேறு சூழ்நிலைகளை எதிர்கொள்ள நான் தைரியமாக இருக்க வேண்டியிருந்தது. எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நிதி ரீதியாக போராடுகிறேன். ஆனால், எந்த சூழ்நிலையையும் என்னால் கையாள முடியும் என்பது எனக்கு தெரியும். ஏன்னா, எனக்கு வேறு வழியுமில்லை. நான் வேலை செய்வதைப் பார்த்து என் குழந்தைகள் மகிழ்ச்சியடைகிறார்கள், எல்லாவற்றிலும் எனக்கு சப்போர்ட் ஆக இருக்கிறார்கள்,” என்று அவர் பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறார்.

அனுவின் லட்சியங்கள் பன்முகத்தன்மை கொண்டவை. அவர் ஒரு புகைப்படக் கலைஞராகவும், பவுன்சராகவும் தொடர்ந்து பணியாற்றுகிறார். அதே நேரத்தில், திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வத்துடன், அதற்கான வாய்ப்புகளுக்காகவும் காத்திருக்கிறார்.

ஏற்கனவே, அவர் மலையாள திரைப்படமான ‘விசேஷத்தில்’ ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ரீலிசுக்காக காத்திருக்கும் ‘பூரம் பூராடம் பூருததி’ படத்தில் ஒருசிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு கிடைத்துள்ள புதிய புகழ் அவரது கதையை வெளிச்சம் போட்டு காட்டி, பல பெண்களுக்கு இன்ஸ்பிரேஷனாக மாறியுள்ள அதேவேளை, ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறை என்ற சமூகத்தில் நிலவி வரும் கருத்தையும் உடைத்தெறிந்துள்ளார்.

“பல பெண்களும் கால் செய்து, உங்கள் கதையை அறிந்தபிறகு, பவுன்சராக பணி செய்யவேண்டும் என்ற ஆர்வம் பிறந்ததாக கூறுகின்றனர். அது எனக்கு ரொம்ப சந்தோஷம். நான் வாழ்க்கையில் போராடும் ஒரு நபர். வாழ்க்கையில் முன்னேற எனக்கு ஒரு வேலை தேவை. அது நான் ஆர்வத்துடனும் அன்புடனும் செய்யும் வேலையாக இருக்க வேண்டும். நாம் விரும்பும் வேலையைச் செய்யும்போது நாம் மோசமாக உணர மாட்டோம் என்று நம்புகிறேன். அது எனக்கு வருமானத்தையும் தருகிறது.”

இந்தியாவில் பவுன்சர்கள் மற்ற நாடுகளில் அனுபவிக்கும் அதே மரியாதை அல்லது அந்தஸ்தை அனுபவிப்பதில்லை. இங்கே, அவர்கள் பெரும்பாலும் குண்டர்களுடன் ஒப்பிடப்படுகிறார்கள், என்று வருத்தத்துடன் கூறி முடித்தார்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *